

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் மேற்குவங்கத்தின் ஹால்டியா, அசன்சோல், சியுரி ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இளைஞர்களின் கனவுகளை சிதைத்து வருகிறது. மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அரசு பணிக்கு ஆட்சியாளர்கள் லஞ்சம் பெறுகின்றனர். பாஜக ஆட்சி அமைக்கும்போது அரசு பணிக்கான தேர்வு வெளிப்படையாக நடைபெறும். லஞ்சம், கமிஷன் இன்றி தகுதியின் அடிப்படையில் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைக்கும்.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்குவங்கத்துக்குள் ஊடுருவல்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை ஆளும் கட்சி வழங்குகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நிலக்கரி மாபியா, மணல் மாபியா உள்ளிட்ட சட்டவிரோத கும்பல்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன.
தற்போது கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். மேற்குவங்கத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அறுதியிட்டு கூறுகிறேன். பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது புதிய யுகம் தொடங்கும்.
இந்த நேரத்தில் பாஜகவின் சார்பில் முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன். நீதியை நிலைநாட்டி நல்லாட்சியை வழங்குவோம். ஊழல், குற்றங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி நிர்வாகம் சீர்படுத்தப்படும். கடமை தவறாமல், பொறுப்புணர்வுடன் ஆட்சி நடத்துவோம். ஊழல், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும். மக்களின் பணத்தை கொள்ளையடித்த ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஊடுருவல் முழுமையாக தடுக்கப்படும். ஊடுருவல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ள அகதிகளுக்கு மட்டும் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும். மேற்குவங்க அரசு ஊழியர்களின் நலன் கருதி 7-வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் உடனடியாக அமல் செய்யப்படும். இரட்டை இன்ஜின் ஆட்சியால் மேற்குவங்கம் அதிவேகமாக முன்னேறும்.
தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். மே 4-ம் தேதி திரிணமூல் காங்கிரஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.