

ஆலப்புழா: கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் எடுத்த அனில் கிஷோர் மீது கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்கூட்டர் மோதியது. அவரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அனில் கிஷோர் இரவோடு இரவாக மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டார்.
மறுநாள் காலை அவர் சாலையோரம் உள்ள கடையின் வராண்டாவில் இறந்து கிடந்தார். அவரது உடைமைகளை போலீஸார் பரிசோதித்தனர். அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து சரும் மூடு பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் முன்னிலையில் ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன.
மொத்தம் ரூ.4.5 லட்சம் பணம் இருந்தது. இவற்றில் 12 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகள். சவுதி ரியால்கள் சிலவும் அவரிடம் இருந்தன. அந்தப் பணத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.