

பாராமதி: மறைந்த அஜித் பவாரின் அஸ்தி பாராமதியில் உள்ள நீரா மற்றும் கர்ஷா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வித்ய பிரதிஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.
இங்கு அஜித் பவாரின் மகன்கள் பர்த் மற்றும் ஜே ஆகியோர் தங்களது தந்தையின் அஸ்தியை நேற்று சேகரித்தனர். பின்னர் அதை பாராமதியில் நீரா மற்றும் கர்ஷா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கரைத்தனர்.
மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் துணை முதல்வராக இருந்த இக்கட்சியின் தலைவர் அஜித் பவார் விமான விபத்தில் இறந்ததால் இவரது மனைவி சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.