

நெல்லூர்: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அக்குழு இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரும் ஏ-34 குற்றவாளியுமான திருப்பதி தேவஸ்தான அதிகாரி விஜயபாஸ்கர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தில், “நான் நெய்யை பரிசோதனை செய்தபோது அதில் கலப்படம் இருப்பதை அறிந்தேன். இதுகுறித்து விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு எடுத்துக் கூறினேன். ஆனால், அவர்கள், எனக்கு தொடர்ந்து லஞ்சம் கொடுத்து நெய்யை தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்தனர்.
இதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2023-ல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்சம், பிரிமியர் நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சம் லஞ்சம் பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதால், இவரது ஜாமீன் மனுவை நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நிராகரித்தது.