100+ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேறியதன் எதிரொலி - ‘எக்ஸிட்’ விதிகளை கடுமையாக்கியது அரசு

100+ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேறியதன் எதிரொலி - ‘எக்ஸிட்’ விதிகளை கடுமையாக்கியது அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: முன்கூட்டியே ஓய்வு பெறுவது, ராஜினாமா செய்வது என நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப உயரதிகாரிகள் வெளியேறியதை அடுத்து வெளியேறுவதற்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது.

பெங்களூரில் உள்ள யுஆர்எஸ்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விஎஸ்எஸ்சி ஆகியவற்றில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரோ பணியாளர்கள் சமீபத்தில் வெளியேறியதாக செய்தி வெளியாகியது.

குறிப்பாக மூத்த விஞ்ஞானி விக்டர் ஜோசப், விஎஸ்எஸ்சியில் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கள் எம்கே 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக சுமார் 13 மாதங்கள் பணியாற்றிய நிலையில், கடந்த பிப்ரவரியில் இவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரைப் போன்ற வெளியேறிய விஞ்ஞானிகள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது 400-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவை, 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளன. 2025ல் மட்டும் கிட்டத்தட்ட 150 மில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன. பிக்ஸெல், துருவா ஸ்பேஸ், ஸ்டகரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன.

இஸ்ரோ பணியில் இருந்து விலகும் அதிகாரிகள், இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இணைகின்றனர். இதுமட்டுமின்றி, சமீப காலத்தில் இஸ்ரோ தனது பணிகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இஸ்ரோவின் வேலைக்குதிரை என்று அழைக்கப்படும் பிஎஸ்எல்வி, ஒரு வருடத்துக்குள் இரண்டு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், அதிக அளவில் பணியாளர்கள் வெளியேறுவதைத் தடுக்க விதிகளை கடுமையாக்கும் புதிய உத்தரவை இந்திய விண்வெளித் துறை வெளியிட்டுள்ளது.

யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் போன்ற மையங்களுக்கு ஜூலை 14 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், இந்தியாவின் மதிப்புமிக்க மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யான் திட்டத்தில் பணியாற்றும் ஏ பிரிவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் ராஜினமா அல்லது விருப்ப ஓய்வு கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என விண்வெளித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதை கடுமையாக பாதிக்கும் மதிப்புமிக்க ககன்யான் மற்றும் பிற முக்கிய திட்டங்களுடன் தொடர்புடைய இஸ்ரோவின் ஏ பிரிவு அறிவியல் தொழில்நுட்ப பணியாளர்கள் விருப்ப ஓய்வு மற்றம் ராஜினமா செய்வதற்கான கோரிக்கைகள் வந்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு ககன்யான் மற்றும் பிற முக்கிமான திட்டங்களுடன் தொடர்புடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகள் வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.

100+ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேறியதன் எதிரொலி - ‘எக்ஸிட்’ விதிகளை கடுமையாக்கியது அரசு
9-ம் வகுப்பில் 3வது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in