

புது டெல்லி: ரூ.4,666 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாதுகாப்பு அமைச்சகம் இன்று (டிச.30) குளோஸ் குவாட்டர் பேட்டில் எனப்படும் மிக நெருங்கிய தூர சண்டைகளின்போது பயன்படுத்தப்படும் சிறு துப்பாக்கிகள், நீரில் பயன்படுத்தப்படும் கனரக ஆயுதங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக மொத்தம் 4,666 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
புதுடெல்லியில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ராணுவத்துக்கும் கடற்படைக்கும் 2,770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.25 லட்சத்திற்கும் அதிகமான ஒப்பந்தம், பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மேக்-இன்-இந்தியா முயற்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.
இந்திய கடற்படையின் குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு 48 கனரக ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் 1,896 கோடி ரூபாய் மதிப்பில் இத்தாலியின் எஸ்ஆர்எல் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இது, நீர்மூழ்கிக் கப்பல்களின் போர் திறனை மேம்படுத்தும்.
இந்த டார்பிடோக்கள், ஏப்ரல் 2028 முதல் தொடங்கி 2030-ம் ஆண்டுக்குள் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த டார்பிடோக்கள் குறிப்பிடத்தக்க செயல்பாட்டுத் திறன்களையும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டிருக்கும்.
2025-26-ம் நிதியாண்டில், ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் 1,82,492 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.