

திருப்பதி: திருப்பதியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக வளாகத்தில் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள பாரதிய அறிவியல் சம்மேளனத்தை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மற்றும் ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் குறித்து நம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே நாம் சொல்லி கொடுக்க வேண்டும். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன், அயர்ன் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களை விட நமது அனுமன், அர்ஜுனர், கர்ணன் போன்றோர் பன்மடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அவதார் சினிமாவை விட நம் மகாபாரதம், ராமாயணம் மிகவும் பிரம்மாண்டம் என்பதை புரிய வைக்க வேண்டும். அது நமது கடமையாகும்.
மேலும், அதில் யார் கெட்டவர்கள், நல்லவர்கள் என்பதையும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். என்.டி. ராமாராவ் பல புராண படங்களில் நடித்து புராண கதாபாத்திரங்களை மக்களின் கண் முன் நிற்க வைத்தார். இதனால் மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. நம்முடைய கலாச்சாரங்கள், புராண காலத்திலேயே இருந்த அறிவியல் ஞானம் போன்றவை ஆச்சர்யப்படுத்துகிறது.
நம் நாடு பிரதமர் மோடியின் தலைமையில் பலம் வாய்ந்த நாடாக எழுச்சி கொண்டு வருகிறது. 2038-ல் உலகிலேயே 3-ம் வல்லரசு நாடாக இந்தியா இருக்கும். 2047ல் உலக நாடுகளில் சக்தி வாய்ந்த நாடாக மாறும். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், ‘‘நம்முடைய அனுபவமே பல அறிவியல் அறிவுகளை வளர்க்கிறது. நாம் எடுத்து கொள்ளும் மார்கம் சரியானதாக இருந்தால், லட்சியத்தை அடைந்து விடலாம்’’ என்றார்.