

அனில் அம்பானி, ஜெப்ரி எப்ஸ்டீன்
புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். புளோரிடா மாகாணம், பாம் பீச் பகுதியில் இருந்த அவருக்குச் சொந்தமான பண்ணை வீடுகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கடந்த 2005-ம் ஆண்டில் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கில் ஜெப்ரிக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து அவர் வெளியே வந்த பிறகும் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். கடந்த 2019 ஆகஸ்ட் 10-ம் தேதி மான்ஹாட்டன் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களுக்கு எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் ஜெப்ரி தொடர்பான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயரும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2017, 2019-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அனில் சென்றார். அப்போது மான்ஹாட்டனில் உள்ள ஜெப்ரியின் வீட்டுக்கும் அவர் சென்றுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி ஜெப்ரி மற்றும் அனில் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தை அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ளது. “எனக்கான உங்களின் (ஜெப்ரி) பரிந்துரை என்ன’’ என்று அனில் கேள்வி எழுப்ப அதற்கு ஜெப்ரி “உங்களுக்கு உயரமான சுவீடன் பெண் பொருத்தமாக இருப்பார்’’ என்று ஜெப்ரி பரிந்துரைக்க, ‘‘உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று அனில் பதில் அளித்திருக்கிறார்.