

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொண்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கிரண் ரிஜிஜு, “மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்துக் கருத்துகளுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உள்துறை அமைச்சர் பதிலளிப்பார்.
எதிர்க்கட்சிகளிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், விவாதமும் அதற்குப் பதிலளிக்கும் நிகழ்வும் நடைபெறும்போது, உள்துறை அமைச்சரின் பேச்சினை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் இடையூறுகளை உருவாக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் பதிலைக் கேட்க வேண்டும். விவாதம் தொடங்கியதும், அது முழுமையான மற்றும் விரிவான விவாதமாக அமைய வேண்டும்" என்று ரிஜிஜு கூறினார்.
டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் போராட்டப் பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை வரம்பு மீறியது என்றும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதை கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நடவடிக்கை அனைத்தும் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உள்துறை அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.