

அமித் ஷா
புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகளை மட்டுமே பாடுவது என எடுத்துள்ள முடிவின் மூலம், கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களை காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், சுதந்திர தின விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நடைபெற்ற தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது வழக்கத்துக்கு மாறாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, வந்தே மாதரம் பாடுவதை நிறுத்துமாறு சைகை காட்டியதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், கோவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
காங்கிரஸின் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ஆச்சரியமளிக்கும் மற்றும் தேசவிரோதமான ஒரு முடிவை எடுத்துள்ளது. 1937-ம் ஆண்டில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பின்பற்றி, வந்தே மாதரம் என்ற மகத்தான பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட முடிவு செய்துள்ளனர்.
சமாதான அரசியல்: 1937-ம் ஆண்டில் முஸ்லிம் மக்களை சமாதானப்படுத்தும் அரசியலுக்காக, வந்தே மாதரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து காங்கிரஸ் கட்சி நாட்டின் பிரிவினைக்கான அடித்தளத்தை அமைத்தது என்பதை நாட்டு மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அங்கிருந்தே ‘இரு நாடுகள் கோட்பாடு’ வலுப்பெற்று, இறுதியில் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் உருவானது.
அதே வரலாற்றுப் பிழையை காங்கிரஸ் மீண்டும் செய்து உள்ளது. காங்கிரஸின் இந்த முடிவு, அவர்களின் அதிதீவிர திருப்திப்படுத்தல் கொள்கையை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்கள் மறைந்த பங்கிம் சந்திர சட்டர்ஜியின் அழியாத படைப்பை அவமதித்ததோடு மட்டுமல்லாமல், வந்தே மாதரம் என முழங்கியபடி நாட்டின் சுதந்திரத்துக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டும், பல ஆண்டுகள் சிறையில் வாடியும் தியாகம் செய்த கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவமதித்துள்ளனர். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
சிந்தனை அடிமைத்தனம்: பட்னாவிஸ்
மும்பை: வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகளை மட்டுமே பாடுவோம் என காங்கிரஸ் செயற்குழு எடுத்துள்ள முடிவு குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கூறியதாவது: இந்தியா இப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இல்லை. எனவே காங்கிரஸின் இத்தகைய முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தியாவின் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரம் உண்டு.
சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் எடுத்த முடிவைப் பின்பற்றவில்லை என்றால், அவர்கள் (காங்கிரஸ்) அடிமைத்தனத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகின்றனர் என்பதே அர்த்தம். இதனை நாம் எப்போதும் சிந்தனை அடிமைத்தனம் என்று கூறி வந்தோம். இந்த முடிவின் மூலம் அவர்கள் தங்களின் சிந்தனை அடிமைத்தனத்தையும், அரசியலமைப்புக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி யுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.