புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தினேன். சட்டம் நிறைவேற்றப்பட்டு 30 மாதங்களுக்குப் பிறகு திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
தற்போது நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் தொகுதி மறுவரையறை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்த சூழலில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்துவது சாத்தியமில்லை. தற்போது பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு ஏப்ரல் 29-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். மகளிருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி ஆகும். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.