Published : 26 May 2023 01:43 PM
Last Updated : 26 May 2023 01:43 PM

செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை: காங்கிரஸ்

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: "அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மவுன்ட்பேட்டன், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது பொய்யானது.

செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக சிலர் கருதி, அது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு, பின்னர் அதனை மோடி ஆதரவாளர்கள் ஊடகங்களில் முழங்கி வருகின்றனர். ராஜாஜி குறித்து நன்கு அறிந்த அறிஞர்கள் இருவர், செங்கோல் தொடர்பாக கூறப்படுவதைக் கேட்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நேருவுக்குக் கொடுக்கப்பட்ட செங்கோல் பின்னர் அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும்போது டிசம்பர் 14, 1947 அன்று ஜவஹர்லால் நேரு என்ன சொன்னாரோ அதுதான் அவர் சொன்னது. அதுதான் ஆதாரபூர்வமானது.

தமிழகத்தில் அவர்களுக்கு (பாஜகவுக்கு) இருக்கும் அரசியல் நோக்கங்களுக்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோல் விவகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை திரிக்கிறார்கள். புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என்பதுதான் உண்மையான கேள்வி" என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x