Last Updated : 21 Oct, 2017 09:33 AM

 

Published : 21 Oct 2017 09:33 AM
Last Updated : 21 Oct 2017 09:33 AM

பெங்களூரு வெள்ளத்தால் நிரம்பிய தமிழக அணைகள்: நீண்ட காலத்துக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பெங்களூருவில் பெய்த வரலாறு காணாத கன மழையால் நீண்ட காலத்துக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சாத்தனூர் ஆகிய 2 அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதி யில் இருந்து பெங்களூருவில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையிலும், தொடரும் கன மழையால் பெங்களூருவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அர்க்காவதி, ரிஷபாவதி உள்ளிட்ட ஆறுகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிக்கப்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கோலார் மாவட்டத்தின் வழியாக பெங்களூருவில் பாய்கிறது. பெங்களூருவில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீர் கெலவரப்பள்ளி வழியாக தமிழகத்தில் நுழைந்ததால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பெங்களூரு வெள்ளத்தால் நீண்ட காலத்துக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 1.666 டிஎம்சி முழு கொள்ளளவு கொண்ட கிருஷ்ண கிரி கே.ஆர்.பி. அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. எனவே, கடந்த 2 மாதங்களில் அணையில் இருந்து 1.27 லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிக எளிதாக தர்மபுரி, திருவண்ணாமலையை கடந்து சாத்தனூர் அணையை அடைந்தது. தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி 7.32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 6.92 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தென்பெண்ணை ஆறு காலம் முழுவதும் பாயும் வற்றாத ஜீவ நதி அல்ல. கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் நந்தி மலையில் போதிய அளவுக்கு மழை பொழியவில்லை. இதனால் நீர்வரத்து குறைந்து கர்நாடகாவில் சிக்கப்பள்ளாப்பூர், கோலார், பெங்களூரு ஆகிய மாவட்டங்களை கடந்து, தமிழகத்துக்கு தென் பெண்ணை ஆற்று நீர் வருவதே கடினமாக இருந்தது.

அண்மையில் பெங்களூருவில் பெய்த கன மழையால் நீண்ட காலத்துக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனை தென்பெண்ணை ஆற்று கரையோர விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மிகவும் ஆச்சர்யமாக பார்த்தனர். நீண்ட காலத்துக்கு பிறகு பெங்களூருவில் பெய்துவரும் கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரு மாதமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு விநாடிக்கு 2500 கன அடி நீரும், சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு சராசரியாக 3500 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களின் பாசனத்துக்கு தேவை யான நீர் திறக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x