Published : 25 May 2023 06:00 AM
Last Updated : 25 May 2023 06:00 AM

கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை ஏஜென்ட் மூலம் பறிமுதல் செய்வது சட்டவிரோதம் - பாட்னா உயர் நீதிமன்றம்

பாட்னா: கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை, மீ்ட்பு ஏஜென்ட்டுகள் மூலம் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது சட்ட விரோதம் எனவும், இது போன்ற
நடவடிக்கைகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வாகனங்கள் வாங்கிய 5 பேர், கடன் தவணையை திருப்பிச் செலுத்தவில்லை. அவர்களது வாகனங்களை, மீட்பு ஏஜென்ட்டுகள் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வாகனங்களை பறிகொடுத்த 5 பேரும் பாட்னா
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சொத்துகள் ஏலம்: இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கூறியதாவது: வாகன கடன்களை வசூலிக்க, சொத்துகளை அடமானம் பெற்று கடன் வழங்கும் முறையை பின்பற்ற வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தினரின்
உதவியோடு ஏலம் விட்டு கடனை வசூலிக்கலாம். அதைவிடுத்து கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை குண்டர்கள் மூலம் பறித்துச் செல்வது, அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவுப்படி வாழ்வாதார உரிமையை பறிக்கும் செயல். இதுபோன்ற நடவடிக்கைகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யலாம்.

ரூ.50,000 அபராதம்: எந்த வாகனங்களும், மீட்பு ஏஜென்டால் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யக் கூடாது என்பதை பிஹார் மாநிலத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறு செய்த வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஐந்துக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ரஞ்சன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x