Published : 21 Oct 2017 09:39 AM
Last Updated : 21 Oct 2017 09:39 AM
‘‘குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் அதிகாரத்தை, பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது’’ என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து நவம்பர் 9-ம் தேதி இமாச்சலில் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், குஜராத் மாநில தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறும்போது, ‘‘டிசம்பர் 18-ம் தேதிக்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும்’’ என்று தெரிவித்தது.
இதற்கு காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ‘‘குஜராத்தில் தேதி அறிவித்துவிட்டால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். மத்திய, மாநில அரசுகளால் எந்த நலத்திட்டங்களையும் அறிவிக்க முடியாது. அதனால் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கவில்லை’’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
குஜராத்தில் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, பிரதமர் மோடி மேற்கொள்ளும்போது, அந்த மாநிலத்துக்கு தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கும் அதிகாரத்தை மோடிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது. மேலும், குஜராத் மாநிலத்துக்கு சலுகைகள், இலவச திட்டங்கள் அறிவித்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட கூடும்.
அதன்பின்னர், தற்போது விடுமுறை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT