Published : 06 Oct 2017 09:17 AM
Last Updated : 06 Oct 2017 09:17 AM

தாய், மகள் பலாத்கார சம்பவம் தொடர்பாக உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

உத்தரபிரதேச முன்னாள் அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு சுதந்திரம் தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷார் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரை வழிமறித்த மர்ம நபர்கள் அதிலிருந்த பெண்ணையும் அவரது மகளையும் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது அரசியல் சதி என அப்போதைய அமைச்சர் அசம் கான் தெரிவித்தார்.

இதனிடையே இது தொடர்பான வழக்கை டெல்லிக்கு மாற்றவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த மனுவை தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விசாரணையின்போது, அமைச்சராக இருப்பவர் பாதிக்கப்பட்ட நபரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கலாமா? இது பேச்சு சுதந்திரத்தின் கீழ் வருமா? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர். மேலும் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த டிசம்பர் 15-ம் தேதி அசம் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேநேரம், இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு அமைச்சர் பேச்சு சுதந்திரம் என்ற உரிமையைக் கோர முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x