Published : 28 Oct 2017 05:07 PM
Last Updated : 28 Oct 2017 05:07 PM

பொதுத்துறை வங்கிகளை ‘ஏமாற்றியதாக’ ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மீது சிபிஐ புதிய வழக்கு

குஜராத்தில் இயங்கும் சந்தேசரா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆந்திர வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளை ‘ஏமாற்றியதாக’ இந்நிறுவனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இயக்குநர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், அப்போதைய ஆந்திர வங்கி இயக்குநர் ஆகியோர் மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை ரூ.5,383 கோடி வரை ‘ஏமாற்றியதாக’ சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

ஏமாற்று, போர்ஜரி, ஏமாற்றுவதற்காக போர்ஜரி, போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பு, குற்றச் சதி மற்றும் குற்ற நடத்தை ஆகிய சட்டப்பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

குஜராத் வதோதராவில் உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம், இதன் இயக்குநர்கள் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்தி சேத்தன் சந்தேசரா, ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீட்சித், நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, விலாஸ் தத்தாத்ரேய ஜோஷி ஆகியோர் மீதும் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஹேமந்த் ஹாதி, அப்போதைய ஆந்திர வங்கி இயக்குநர் அனுப் கார்க், அதிகம் அறியப்படாத தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.

ஆந்திரவங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5000 கோடி அளவுக்குக் கடன்கள் வாங்கி ஏமாற்றியதாக முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்ட் நிறுவனமாகும். இதன் வர்த்தகங்கள் எண்ணெய், எரிசக்தி, துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் என்று விரிவாக்கம் பெற்றது. நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது.

கடன் தொகையினை அதிகரிக்க நிறுவன இயக்குநர்கள், தங்கள் நிறுவன சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் உடன் கூட்டு சேர்ந்து நிறுவனத்தின் கொள்முதல், விற்பனை, விற்று முதல், மூலதன சொத்துக்களின் மீதான முதலீடு ஆகியவற்றின் ஏடுகளைத் திருத்தியுள்ளனர் அல்லது மாற்றியமைத்துள்ளனர். இது வங்கிகளை ஏமாற்றி கடன் பெறும் நோக்கத்துக்காக என்று சந்தேகிக்கப்படுகிறது என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடன் விண்ணப்பத்தில் நிறுவனத்தின் விற்று முதல், நிகர லாபம் மற்றும் பிற விவரங்களில் மோசடி செய்துள்ளதாக சிபிஐ புகார் தெரிவித்துள்ளது. மேலும் கடன் தொகையினை தங்கள் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளனர். ஸ்டெர்லிங் பயோடெக் பங்குகள் விற்பனையில் பினாமிகளையும் பயன்படுத்தியுள்ளதாக சிபிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

அப்போதைய ஆந்திர வங்கி இயக்குநர் அனுப் குமார் கார்க் என்பவருக்கு ஹவாலா நடைமுறைகள் மூலம் டெல்லியில் அடிக்கடி பணம் அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x