Published : 30 Oct 2017 09:10 AM
Last Updated : 30 Oct 2017 09:10 AM

அமைச்சரின் ஆபாச சி.டி. விவகாரம் சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு பரிந்துரை

சத்தீஸ்கர் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜேஷ் முனோத் தொடர்புடைய ஆபாச சி.டி. விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

முதல்வர் ரமண் சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சர் பிரேம் பிரகாஷ் பாண்டே நேற்று ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்த வீடியோ போலியானது. காங்கிரஸ் கட்சி இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளது. இது அரசியல் மற்றும் கிரிமினல் சதியாக இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மா கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டபோது, இந்த விவகாரம் வெளியில் வந்தது. வினோத் வர்மாவை டெல்லிக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் சத்தீஸ்கர் போலீஸார் கைது செய்தனர். அமைச்சரின் ஆபாச பட சி.டி.யை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக வினோத் வர்மா மீது குற்றம் சாட்டினர். இப்புகாரை வினோத் வர்மா மறுத்துள்ளார். கைது நடவடிக்கையை காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கண்டித்துள்ளன.

இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பஹெல் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சரின் ஆபாச சி.டி. தன்னிடமும் இருப்பதாக பூபேஷ் கூறியதை தொடர்ந்து, அமைச்சர் அளித்த புகாரின் பேரில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

“இந்த சி.டி. போலியானது. எந்த விசாரணை அமைப்பும் இதுகுறித்து விசாரிக்கலாம்” என்று அமைச்சர் ராஜேஷ் முனோத் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x