

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 73.19 சதவீதவாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று 2-ம் கட்ட பயிற்சி அளித்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது. 16-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்.