Published : 20 Sep 2017 10:38 AM
Last Updated : 20 Sep 2017 10:38 AM

ஏழுமலையானுக்கு இலவசமாக திரைச்சீலை வழங்கும் பக்தர்

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 16 ஆண்டுகளாக கற்ப சன்னதி முதல் தொடர்ந்து 3 வாயில்களுக்கு திருப்பதியை சேர்ந்த மணி எனும் பக்தர் இலவசமாக திரைச்சீலை வழங்கி வருகிறார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு திரளான பக்தர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இலவசமாக பல கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர். இதில், திருப்பதி தீர்த்த கட்டு வீதியைச் சேர்ந்த தையல்காரரான சுப்ரமணி என்கிற மணி என்பவர் கடந்த 16 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு இலவசமாக திரைச்சீலைகளை வழங்கி வருகிறார்.

இவர் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனி வார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் போன்ற நான்கு முக்கிய நிகழ்வுகளுக்கு முன் நடைபெறும் கோயிலை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியான கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிக்கு இந்த திரைச்சீலைகளை வழங்கி வருகிறார். ஒவ்வொரு முறையும் 3 திரைச்சீலைகள் வீதம் ஆண்டிற்கு 4 முறை என மொத்தம் 12 திரைச்சீலைகளை வழங்குகிறார்.

ஒவ்வொரு முறையும், தான் தயாரித்த திரைச்சீலைகளை ஒரு தட்டில் தலையில் சுமந்தபடி அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்று தேவஸ்தான அதிகாரிகளிடம் மணி வழங்குவார். பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று 3 திரைச்சீலைகளை தலையில் சுமந்து சென்று அதிகாரிகளுக்கு வழங்கினார். தேவஸ்தான அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, கடந்த 2 ஆண்டுகளாக இவர் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கும் இலவசமாக திரைச்சீலைகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x