Published : 05 May 2023 07:34 AM
Last Updated : 05 May 2023 07:34 AM

‘தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: நாடு முழுவதும் இன்று திரையிடப்படுகிறது

கோப்புப்படம்

புதுடெல்லி: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் இன்று திரையிடப்படுகிறது.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து தடை விதிக்க கோரி கடந்த 2, 3-ம் தேதிகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. இதைத் தொடர்ந்து 3-வது முறையாக தலைமை நீதிபதியிடம் நேற்று மீண்டும் முறையிடப்பட்டது.

இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் தயாரிப்பாளர் நிலையில் இருந்து சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் எத்தனை சவால்களை எதிர்கொள்வார்? கேரள உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் என அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுகின்றன.

திரைப்படத்தில் நடிகர், நடிகைகளின் கடின உழைப்பு இருக்கிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே திரைப்படங்களுக்கு தடை கோரும் வழக்குகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். இந்த திரைப்படத்தின் தலைவிதியை மக்கள் தீர்மானிப்பார்கள். அவசர தேவையென்றால் மனுதாரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திரசூட் ஏற்கவில்லை.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் விபுல் ஷா ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x