மணிப்பூர் வன்முறை | கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு

மணிப்பூரில் கலவரம்
மணிப்பூரில் கலவரம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் 10 மலை மாவட்டங்களில் இந்தப் பேரணி நடைபெற்றது. அப்போது பழங்குடிகளுக்கும் - மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் காவல் துறை குவிக்கப்பட்டது. மேலும், இணையச் சேவையை 5 நாட்களுக்கு முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப் பிரிவும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அந்த செய்தித் தொடர்பாளர், நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், கலவரக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறுபவர்களாக இருந்து, நிலைமை கட்டுப்படுத்த முடியாததாக மாறுமானால் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்டதும் சுட மணிப்பூர் அரசு இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. மாநில ஆளுநர் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வன்முறைக்கு பாஜகவின் அரசியலே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. | வாசிக்க > ‘மணிப்பூர் பற்றி எரிய பாஜக அரசியலே காரணம்’ - அமைதி நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு காங். வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in