

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ரூ.100 கோடி செலவில் பத்து சம்ஸ்கிருதப் பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ்டூ வரையிலானப் பாடத்திட்டத்திடன் தொடங்கும் இந்தத் திட்டத்துக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆளும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. இந்துத்துவா கொள்கைகள் கொண்ட இக்கட்சி துவக்கம் முதல் சம்ஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால், பாஜக தலைமையில் ஆளும் மத்திய அரசும், உ.பி. உள்ளிட்ட மாநில அரசுகளும் சம்ஸ்கிருத மொழியை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், உ.பி.யில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 10 சம்ஸ்கிருத பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றில் அனைத்து பாடங்களும் சம்ஸ்கிருத மொழியிலேயே போதிக்கப்பட உள்ளன. இப்பள்ளிகள், உ.பி.யின் புனித நகரங்களான பிரயாக்ராஜ், அயோத்யா, வாரணாசி, சித்ரகுட் மற்றும் கோரக்பூரில் முதல்கட்டமாகத் தொடங்கப்பட உள்ளன. தொடர்ந்து உ.பி.யின் முசாபர்நகர், சஹரான்பூர், அமேதி, ஹர்தோய் மற்றும் ஏட்டா ஆகிய மாவட்டங்களிலும் இந்த சம்ஸ்கிருதப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
இதற்காக, உ.பி. அரசு நடப்புநிதியாண்டின் (2023-24) பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2 லட்சம் அளிக்கவும் ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. உ.பி.யில் அரசு உதவிபெறும் தனியார் சம்ஸ்கிருதப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உ.பி.யை தொடர்ந்து பாஜக ஆளும் இதர மாநிலங்களிலும் சம்ஸ்கிருதப் பள்ளிகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனிடையே, நாடு முழுவதிலும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நடத்தும் சமஸ்கிருதக் கல்வி நிறுவனங்கள் மொத்தம் 17 உள்ளன. இவை கடந்த 1791 ஆம் ஆண்டு முதல் 2018 வரை தொடங்கப்பட்டவை ஆகும். இவை உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன.
இதில், நான்கு பழமையான சமஸ்கிருதக் கல்வி நிறுவனங்களை மத்திய கல்வித்துறை நிர்வகித்து வருகிறது. இந்த நான்கில் மூன்று சம்ஸ்கிருதக் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகமாக மாற்றவும் மத்திய அரசு முன்னமே முடிவு செய்துள்ளது.
உலகின் மூத்தமொழியாக..
உலகின் பழமையான மொழி எது என்பதில் தமிழுக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் நீண்ட காலமாக போட்டி நிலவி வந்தது. இதை முடித்து வைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, சமீப காலமாக உலகின் மூத்தமொழியாக தமிழைக் குறிப்பிட்டு வருகிறார்.
எனினும், தமிழை விட சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. சம்ஸ்கிருத வழியில், தமிழுக்காக உள்ள மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தையும் தமிழ் பல்கலைக்கழகமாக மாற்ற தமிழ் ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.