

புதுடெல்லி: சூடானிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 40 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தனர். இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் கூறியதாவது.
உள்நாட்டுப் போர் நடை பெற்று வரும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சூடானில் இருந்து மீட்கப்பட்ட 40 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130ஜே விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லியை வந்தடைந்த னர். ஆபரேஷன் காவேரி திட்டம் தொடங்கியது முதல் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்துவரப்படுவது இது எட்டாவது முறையாகும்.
முன்னதாக ஜெட்டாவில் இருந்து ஏழாவது முறையாக கிளம்பிய விமானத்தில் அழைத்து வரப்பட்ட 229 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவை வந்தடைந்தனர். அதேபோன்று, சனிக்கிழமை மாலை 365 பேரும், காலை 231 பேரும் இந்தியா வந்தடைந்துள்ளனர்.
இதுவரை..
வன்முறை வெடித்துள்ள சூடானில் 3,000 இந்தியர்கள் சிக்கி யுள்ளதாக கூறப்படும் நிலையில் 2,400-க்கும் அதிகமானோர் இதுவரை பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். இவ்வாறு மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.