Published : 24 Apr 2023 01:41 PM
Last Updated : 24 Apr 2023 01:41 PM

கொலீஜியம் முறைக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தேதி அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் எனப்படும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு தேர்வு செய்கிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசு தரப்பில் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆணையத்தை ஏற்க மறுத்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் மேத்தீவ் நெடும்பாரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீண்ட காலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து மேத்தீவ் நெடும்பாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் இன்று முறையிட்டார்.

அப்போது, இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாலும், அரசியல் சாசன அமர்வின் உறுப்பினரான நீதிபதி எஸ்.கே. கவுல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலும், அரசியல் சாசன அமர்வு தற்போது ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரும் வழக்கை விசாரித்து வருவதாலும் தாமதமாவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய நெடும்பாரா, கோடைக்கால விடுமுறைக்கு முன்போ அல்லது அதன் பிறகோ வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தேதியை தெரிவியுங்கள் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நாங்கள் தேதி தருகிறோம் என உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x