Published : 02 Sep 2017 08:56 AM
Last Updated : 02 Sep 2017 08:56 AM

கடைசி குடிமகனுக்கும் நலத்திட்டம் சேரவேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை

‘‘மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களும், குக்கிராமங்களில் வசிக்கும் கடைசி குடிமகனுக்கும் போய்சேர வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சி மேம்படும்’’ என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு தனி விமானம் மூலம் வந்தார். அவரை ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தார். பின்னர், திருப்பதியில் ரூ. 135 கோடியில் கட்டப்பட்ட ஸ்ரீ பத்மாவதி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய பயணத்தை தொடங்கிய ஆந்திரா, தற்போது புதிய உத்வேகத்துடன் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அரிசி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நாட்டுக்கே ஆந்திரா முன்னுதாரணமாக விளங்குகிறது.முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திரா வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் குக்கிராமங்களில் உள்ள கடைசி குடிமகனுக்கும் போய் சேரவேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சி மேம்படும். இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

பின்னர், திருமலைக்கு சென்ற குடியரசுத் தலைவர், இரவு திருமலையில் தங்கினார். இன்று காலை அவர் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x