Published : 24 Sep 2017 07:51 AM
Last Updated : 24 Sep 2017 07:51 AM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தன் ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அவர் குடகில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவருடைய துணைவியார் ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு சிறு சலனம்கூட இல்லாமல், சசிகலா ஆட்சியை காப்பாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைவரையும் அமைதியாக பதவியேற்க செய்தார். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் சரியாக ஆட்சி நடத்தவில்லை என இப்போது அவர் உடன் இருப்பவர்களே புகார் சொன்னார்கள். தங்கமணி, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட பலரும் பன்னீர்செல்வம் சரியில்லை என சசிகலாவிடம் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
ஆட்சியும், அதிகாரமும் ஒருவர் கையில் இருக்கவேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் சொன்னதாலே, பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரிந்து சென்ற பன்னீர் செல்வம் அதிமுகவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் செயல்பட்டார். இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்தார். இப்போது அவருடனே எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்திருப்பது சதி மட்டுமல்ல. தன்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த சசிகலாவுக்கு செய்த துரோகம்.
எனவே எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் சேர்ந்து நடத்தியது பொதுக்குழு கூட்டம் அல்ல. எங்களது அணி சார்பாக விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். தேர்தல் ஆணையத்திடம் சசிகலாவே பொதுச் செயலாளர் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எங்கள் பக்கம் இருப்பதால் துரோகிகளின் ஆட்சி தொடரக்கூடாது. மீண்டும் நடைபெறும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால் அவையில் யாருக்கு பலம் அதிகம் என தெரியவரும்.
இதே போல ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. சசிகலா ஒப்புதல் இல்லாமல் அதனை வெளியிட முடியாது. விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் சிசிடிவி காட்சிகளை ஒப்படைப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT