Last Updated : 24 Sep, 2017 07:23 AM

 

Published : 24 Sep 2017 07:23 AM
Last Updated : 24 Sep 2017 07:23 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் கர்நாடகா: காங்கிரஸ், பாஜக பிரச்சாரம் தொடங்கின

கர்நாடகாவில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் பிரச்சாரம் தொடங்கியுள்ளன.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது. இதனால் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. கர்நாடக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 150 தொகுதிகளை இலக்காக நிர்ணயித்து அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் ‘வீடுதோறும் காங்கிரஸ்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் மேலிடத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வீடுதோறும் பிரச்சாரம்

இந்நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசும்போது, “கர்நாடகாவில் நான்கரை ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை வீடுதோறும் சென்று விளக்க இருக்கிறோம். 1 கோடியே 10 லட்சம் வீடுகளுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் நேரடியாகச் சென்று வாக்காளர்களிடம் சாதனைகளை விளக்குவார்கள். சனிக்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை 224 தொகுதிகளிலும் காங்கிரஸார் மக்களை சந்திப்பார்கள். கடந்த 2013-ல் நடந்த தேர்தலில் 265 வாக்குறுதிகள் அளித்தோம். இதில் இதுவரை 255 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எஞ்சியவற்றை விரைவில் நிறைவேற்றுவோம்” என்றார்.

பாஜக பேரணி

பாஜக மாநில தலைவர் எடியூரப்பா நவம்பர் முதல் ஜனவரி 14-ம் தேதி வரை கர்நாடகா முழுவதும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அல்லது கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை அழைத்து வந்து, மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x