Published : 14 Sep 2017 08:29 AM
Last Updated : 14 Sep 2017 08:29 AM

பள்ளி மாணவன் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நிர்வாகி மனு

ஹரியாணாவில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் படித்த பள்ளியின் நிர்வாகி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கடந்த 8-ம் தேதியன்று பள்ளி வளாகத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தான். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்று, அது முடியாததால் சிறுவனை பேருந்து நடத்துநர் அசோக் குமார் என்பவர் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. ரியான் சர்வதேச பள்ளியின் வடக்கு மண்டல தலைவர் பிரான்சிஸ் தாமஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சோன்ஹா என்ற இடத்தில் உள்ளூர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வாதாடக் கூடாது என்று வக்கீல்கள் சங்கம் அறிவுறுத்தியது. இதனால், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரான்சிஸ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது 18-ம் தேதி விசாரணை நடக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரியும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் வேறு 2 மனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் 15-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x