Published : 01 Apr 2023 12:49 PM
Last Updated : 01 Apr 2023 12:49 PM

“2024 தேர்தல் நெருங்குவதால் பாஜக வன்முறையை கையிலெடுக்கிறது” - கபில் சிபல் குற்றச்சாட்டு

கபில் சிபல் | கோப்புப்படம்

புதுடெல்லி: "2024 பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வகுப்புவாத வன்முறைகளைக் கையிலெடுக்கத் தொடங்கி விட்டது. மேற்கு வங்கம், குஜராத்தில் நடந்தவை அதற்கான முன்னோட்டம் தான்" என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் பாஜகவும் திரிணாமூல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேபோல, வியாழக்கிழமை நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின்போது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் வன்முறைகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கபில் சிபல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஏப்.1) வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில்," 2024-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பாஜகவினருடைய மேஜையில் 1) வகுப்புவாத வன்முறை, 2)வெறுப்பு பேச்சுக்கள், 3) சிறுபான்மையினரைத் தூண்டிவிடுதல், 4) அமலக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகளை குறிவைத்தல் போன்றவை தயாராக இருக்கின்றன. மேற்கு வங்கம் பற்றி எரிவதும், கர்நாடகா, குஜராத்தில் கலவரம் புகைவிடத் தொடங்கி இருப்பதும் அதற்கான முன்னோட்டமே" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கபில் சிபல் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x