Published : 18 Sep 2017 06:36 AM
Last Updated : 18 Sep 2017 06:36 AM
பதான்கோட் விமானப்படை முகாம் தாக்குதலின் முக்கிய குற்றவாளி மசூத் அசாரை நீதியின் முன்பு நிறுத்தும் வரை ஓயமாட்டோம் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பரூதின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஜனவரி 2-ம் தேதி பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாதி மசூத் அசார் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் சீனாவின் தலையீட்டால் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வின் பொது சபை கூட்டம் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பரூதின், நியூயார்க்கில் நேற்று கூறியதாவது: மசூத் அசாரை நீதியின் முன்பு நிறுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இந்த விவகாரத்தில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களது முயற்சியில் முழுவெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை காந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்தினர். அதில் இருந்த பயணிகளை விடுவிக்க, டெல்லி சிறையில் இருந்த மசூத் அசாரை மத்திய அரசு விடுவித்தது. அதன்பின் காந்தகாரில் இருந்து பாகிஸ்தான் சென்ற மசூத் அசார் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல சதி திட்டங்களைத் தீட்டி தீவிரவாத தாக்குதல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT