Published : 13 Sep 2017 09:37 AM
Last Updated : 13 Sep 2017 09:37 AM

பள்ளி மாணவர் பாதுகாப்பு: விதிகளை அமலாக்க கோரி மனு; விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக் கொண்டது.

மூத்த பெண் வழக்கறிஞர்களான ஆபா சர்மா மற்றும் சங்கீதா பாரதி ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், “பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக ஏற்கெனவே உள்ள பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் பள்ளி வாகனங்களில் மாணவர்கள் ஏறியது முதலே அவர்களது பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதி செய்யும் வகையில் கூடுதல் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரிசீலனை செய்தது. பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “குருகிராமில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி அவனது தந்தை ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதனுடன் சேர்த்து வரும் 15-ம் தேதி இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி கழிவறையில், கடந்த 8-ம் தேதி 7 வயது மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தான். பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்று, அது முடியாததால் கொலை செய்ததாக, பள்ளி பேருந்து நடத்துநர் அசோக் குமாரை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x