Published : 29 Mar 2023 12:31 PM
Last Updated : 29 Mar 2023 12:31 PM

லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது: மக்களவை செயலர் அறிவிப்பு

லட்சத்தீவு எம்.பி. முகமது  ஃபைசல் | கோப்புப்படம்

புதுடெல்லி: லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக்களவை செயலாளர் இன்று (மார்ச் 29) நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்த கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள மக்களவை செயலரின் அறிக்கையில், "முகமது ஃபைசல் பி.பி,யின் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு தடைவிதித்து ஜன.25, 2023-ல் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, 2023ம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e), மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 8 படி அறிவிக்கப்பட்ட தகுதி இழப்பு அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. ஃபைசல், தனது தகுதி இழப்பு நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடைவிதித்தும்கூட, மக்களவை செயலகம் தனது தகுதி இழப்பை இன்னும் திரும்பப் பெறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் மீதான தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசல் மீதான நடவடிக்கையின் பின்னணி: முன்னதாக, லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முகமது பைசல். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முகமது பைசலுக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

ஆனால், முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், எம்பி பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது. தற்போது எம்.பி பதவியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முகமது பைசல் பங்கேற்று வருகிறார்.

குற்றவியல் வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளான வயநாடு எம்.பி. ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டிருப்பதற்கு மத்தியில் முகமது ஃபைசல் விவகாரம் அதிக கவனம் பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x