“வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது” - பிரதமர் மோடி

“வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது” - பிரதமர் மோடி
Updated on
1 min read

சிக்கபல்லாபூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறது என்றும் அனைவரது முயற்சியின் காரணமாக வளர்ந்த நாடாக மாறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடைபெற்ற ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, நிறுவனத்தை தொடங்கிவைத்தார். இதையடுத்து பேசிய அவர், ''நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது அமிர்த மகோத்சவ காலத்தில் உள்ளது. வளர்ச்சி பெற்ற நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதில் நாடு உறுதியாக உள்ளது.

குறுகிய காலத்தில் நாடு எவ்வாறு வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியும் என்று மக்கள் பலரும் கேள்வி கேட்கிறார்கள். நிறைய சவால்கள் இருக்கின்றன. நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அப்படி இருக்கும்போது குறுகிய காலத்தில் இந்தியா எவ்வாறு வளர்ந்த நாடாக மாற முடியும் என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கு எனது பதில், நாட்டு மக்கள் அனைவரின் முயற்சி காரணமாக இது நிகழும் என்பதுதான்.

நாட்டின் சுகாதாரத் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு பணிகள் நேர்மையாகவும் திறமையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன'' எனத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in