Published : 03 Sep 2017 09:54 AM
Last Updated : 03 Sep 2017 09:54 AM
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்துவருகிறது. இதேபோல கேரள மாநிலம் வயநாட்டிலும் பரவலாக மழை தொடர்கிறது.
இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 3 தினங்களாக குடகு மாவட்டத்தில் இரவு பகலாக கொட்டிவரும் மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு அதிகரித்தது.
இதனால் நேற்று முன்தினம் மாலை 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 98.90 அடியாக உயர்ந்தது. நேற்று காலையில் வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்ததால், அணையில் இருந்து 11 ஆயிரத்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு காலை முதலே நீர் வரத்து அதிகரித்ததால் நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.76 அடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே தினத்தில் (செப்.2) கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 92.80 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் கடந்த 4 நாட்களில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 10 அடி அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை முழு கொள்ளளவை (124.80 அடி) எட்டும். அப்போது கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி நதிநீர் பங்கீடு சுமுகமாக அமையும் என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் இரு மாநில விவசாய அமைப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT