Published : 21 Mar 2023 06:02 AM
Last Updated : 21 Mar 2023 06:02 AM

ஜப்பான் - இந்தியா உறவை மேம்படுத்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி, பிரதமர் கிஷிடா அறிவிப்பு

புதுடெல்லி: ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு முறை பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.

பின்னர், டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், இந்திய பயணத்துக்கான வருகை பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருவரும், இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் அடங்கிய கூட்டத்தில் நேரடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர் இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை உலகளாவிய வகையில் மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் கூட்டாக அறிவித்தனர்.

மேலும் இந்த ஒப்பந்த நீட்டிப்பானது, அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதேநேரத்தில், ஜி7 உச்சி மாநாட்டுக்கு ஜப்பான் தலைமை தாங்குகிறது. உலக நலனுக்காக இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் குறிப்பாக பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடுமற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து இரு நாடுகளும் ஆய்வு செய்யவுள்ளன.

செமி கன்டக்டர்கள் மற்றும் மற்றும் பிற முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான நம்பகமான விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவம் குறித்தும் இரு நாடுகள் தரப்பில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: இந்தியாவுடன் ஜப்பான் எப்போதும் நட்புறவைப் பாராட்டி வருகிறது. இந்தியா, ஜப்பான் இடையே பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும். இது வரும் காலங்களில் அதிக அளவில் வளர்ச்சி பெறும்.

இந்தியாவில் ரூ.3,20,000 கோடி: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும். அதேநேரத்தில் ஜப்பானின் பொருளாதார வாய்ப்புகளுக்கு முக்கியத்து வத்தை ஏற்படுத்தும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.3,20,000 கோடியைஜப்பான் முதலீடு செய்யவுள்ளது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x