Published : 27 Sep 2017 10:20 AM
Last Updated : 27 Sep 2017 10:20 AM

காணாமல்போன 70 ஆயிரம் குழந்தைகள் மீட்பு: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

காணாமல்போன 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு முயற்சியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டெல்லியில் குழந்தை தொழிலாளர் குறித்த கருத்தரங்கு ஒன்றில், ராஜ்நாத் சிங் நேற்று பேசும்போது, “காணாமல்போகும் குழந்தைகளை கண்டறியவும் அவர்களின் மறுவாழ்வுக்காகவும் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டத்தை கடந்த 2015 ஜனவரியில் மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியது. இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல்போன குழந்தைகள் இதன்மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் தொடங்கியது முதல் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

ஒருவருக்கு கடவுள் அளிக்கும் மிகச்சிறந்த கொடை குழந்தைப் பருவம் ஆகும். ஆனால் குழந்தைத் தொழிலாளர்களிடம் இருந்து இந்தக் கொடை பறிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் பிரச்சினையில் இருந்து நாட்டை விடுவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். 2022-ல் குழந்தைத் தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x