Published : 19 Mar 2023 05:49 AM
Last Updated : 19 Mar 2023 05:49 AM

ஒவ்வொரு மது பாட்டில் மீதும் 10 ரூபாய் பசு வரி விதிப்பு - இமாச்சல் முதல்வர் அறிவிப்பு

சிம்லா: ‘‘ஒவ்வொரு மது பாட்டில் மீதும் இனிமேல் ரூ.10 செஸ் வரி விதிக்கப்படும்’’ என்று இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் அறிவித்தார்.

இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். இந்நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நேற்று சுக்விந்தர் தாக்கல் செய்தார். 2023 -24-ம் ஆண்டுக்கான ரூ.53,413 கோடி பட்ஜெட்டை அவர் சமர்ப்பித்தார். பேரவையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: இமாச்சலில் விற்கப்படும் ஒவ்வொரு மது பாட்டில் மீதும் இனிமேல் ரூ.10 ‘பசு வரி’ விதிக்கப்படும். அதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அந்தப் பணம் நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும். தவிர பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.416 கோடி செலவாகும்.

மேலும், இமாச்சலை பசுமை மாநிலமாக 2026-ம் ஆண்டுக்குள் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதற்காக மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும். இவ்வாறு சுக்விந்தர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x