Published : 12 Sep 2017 09:45 AM
Last Updated : 12 Sep 2017 09:45 AM

ராணுவத்தில் பாரபட்சம் இல்லாமல்பதவி உயர்வு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனு தாக்கல்

பதவி உயர்வில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தங்களுக்கும் நியாயமான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் கர்னல் மற்றும் மேஜர் பதவிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நீலா கோகலே மூலம் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

போர் முனையிலும் எல்லைப் பகுதியிலும் பணிகளில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகளைப் போலவே, அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளும் அந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போர் முனையில் இருக்கும் அதிகாரிகள் சந்திக்கும் அதே சவால்களை அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளும் சந்திக்கின்றனர். ஆனால், பதவி உயர்வில் அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பதவி உயர்வில் அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.

இது 10 முதல் 15 ஆண்டுகளாக தனது கடமைகளை அர்ப்பணிப்போடு செய்து வரும் அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளின் மன உறுதியை சீர்குலைத்துவிடும். அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளி்ன் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டக்கூடாது. ராணுவத்தின் அனைத்துப் பிரிவினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அலுவலகப் பணி ராணுவ அதிகாரிகளை அவசர, அவசிய காலத்தில் மட்டுமே போரிடும் பகுதிகளில் நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. ராணுவ அலுவலகப் பிரிவுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x