Published : 18 Mar 2023 05:39 AM
Last Updated : 18 Mar 2023 05:39 AM

டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கு 850 மதுபான கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதன்படி கடந்த பிப்ரவரி 26-ம் தேதி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதே ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த 9-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர்.

அவரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க கடந்த 10-ம் தேதி அமலாக்கத் துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகேப் ஹூசைன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை 22-ம்தேதி மணிஷ் சிசோடியா மீதான மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தை விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர், சிபிஐ-க்கு பரிந்துரை செய்தார். அன்றைய தினம் சிசோடியா தனது மொபைல் போனை மாற்றியுள்ளார். அந்த மொபைல் போன் வாயிலாக நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களை இப்போது கண்டறிந்துள்ளோம்.

இதன்படி சிசோடியாவுக்கும் 2 நபர்களுக்கும் இடையே இ-மெயில் மூலமாக தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அந்த இரு நபர்களையும் சிசோடியாவையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். எனவே அவரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஜோகேப் ஹூசைன் கோரினார்.

சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகித் மாத்தூர் கூறும்போது, “கடந்த 7 நாட்களில் அமலாக்கத் துறை நாள்தோறும் அரை மணி நேரம் மட்டுமே சிசோடியாவிடம் விசாரணை நடத்தியிருக்கிறது. தற்போது மீண்டும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோருகிறது. சிபிஐ அமைப்பின் மாற்று அமைப்பாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக்பால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி வரும் 22-ம்தேதி வரை சிசோடியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x