Published : 26 Sep 2017 04:18 PM
Last Updated : 26 Sep 2017 04:18 PM

ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் டெல்லியில் பதுங்கல்?- தேடுதல் வேட்டையில் பஞ்ச்குலா போலீஸ்

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் இன்சானைத் தேடி பஞ்ச்குலா காவல்துறையினர் டெல்லி வந்துள்ளனர்.

அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது வாரண்டுடன் ஹனிபிரீத்தைத் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய டெல்லி தென்கிழக்கு டிசிபி ரோமில் பானியா, ''தலைமறைவாக உள்ள ஹனிபிரீத்தைத் தேடி வந்த பஞ்ச்குலா காவல் துறையினர் டெல்லி வந்தனர். இங்கே ஏ9, கிரேட்டர் கைலாஷ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை'' என்றார்.

ஹரியாணாவில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் பலாத்கார சம்பவத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இவர் குற்றவாளி என கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தப்பிச் சென்று தனது மடத்தில் பதுங்கியிருக்க திட்டமிட்டார்.

ஆயிரக்கணக்கான சீடர்களை மீறி தன்னை கைது செய்வது போலீஸாருக்கு சவாலாக அமையும் என்பதால் அவர் இவ்வாறு திட்டமிட்டார்.

குர்மீத்துக்கு உதவியது, கலவரத்தை தூண்டியது என பல வழக்குகள் குர்மீத்தின் இசட் பிரிவு பாதுகாவலர்கள் 5 பேர், வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் (42), செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஆதித்யா இன்சான் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஹனிபிரீத் இன்சான் தலைமறைவாக உள்ளார்.

ஹரியானா காவல்துறை ஹனிபிரீத்துக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் முன்கூட்டியே ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தைக் கோர உள்ளதாக ஹனிபிரீத்தின் வழக்கறிஞர் கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் டெல்லியில் ஹனிபிரீத்தைத் தேடி பஞ்ச்குலா காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x