Published : 30 Sep 2017 04:26 PM
Last Updated : 30 Sep 2017 04:26 PM

திருப்பதி பிரம்மோற்சவம் 8ம் நாள் விழா: தேரோட்டத்தில் மலையப்பர் பவனி ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைப்பெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையான 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில், 8ம் நாளான இன்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரின் மீது உப்பு, மிளகு போன்றவைகளை தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தும் நேர்த்தி கடனை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பவனி வந்து அருள் பாலிக்க உள்ளார். பின்னர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சிகள் நடந்து, பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x