Published : 06 Mar 2023 08:46 AM
Last Updated : 06 Mar 2023 08:46 AM

நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் சிறுநீர் கழித்த இந்திய மாணவர் கைது

கோப்புப்படம்

புதுடெல்லி: நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது இந்திய மாணவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.16 மணிக்கு நியூயார்க்கிலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 21 வயது ஆர்யா வோஹ்ரா என்ற மாணவரும் பயணம் செய்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஆர்யா வோஹ்ரா அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார்.

விமானத்தில் மது அருந்திய ஆர்யா சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த ஆண் பயணி மீது அவர் சிறுநீர் கழித்துள்ளார். இதையறிந்த விமான பணியாளர்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 10.12 மணிக்கு அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தை அடைந்தது. அப்போது, அந்த மாணவரை டெல்லி காவல் துறை கைது செய்தது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் இனி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுமதிக்கப்பட மாட்டார் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் இந்தியப் பயணி ஒருவர் அருகில் இருந்து 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்த நிகழ்வு தேசிய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x