Published : 15 Sep 2017 11:45 AM
Last Updated : 15 Sep 2017 11:45 AM
ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தின் சர்வதேச எல்லையில் அத்துமீறி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் பலியானார்.
எல்லைப் பாதுகாப்புப் படைக் காவலர் பிஜேந்தர் பகதூர், ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவு 12.20 மணிக்கு பாகிஸ்தான் வீரர்கள் சிறு பீரங்கி மற்றும் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்துப் பேசிய பிஎஸ்எப் அதிகாரி, ''தாக்குதலின்போது பிஜேந்தருடைய வயிற்றின் இடப் பகுதியில் புல்லட் பாய்ந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியத் தரப்பிலும் உறுதியான பதிலடி கொடுக்கப்பட்டது. நள்ளிரவில் இருந்து காலை வரை இருபுறங்களிலும் விட்டுவிட்டு தாக்குதல் நடைபெற்றுக் கொண்டே இருந்தது'' என்றார்.
தாக்குதலில் பலியான பிஜேந்தர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 32 வயதான இவருக்கு சுஷ்மிதா சிங் என்ற மனைவி உள்ளார்.
பாகிஸ்தான் கடந்த மூன்று நாட்களாக எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT