ஹோலி விடுமுறைக்கு பிறகு ஹிஜாப் வழக்கு விசாரணை நடத்தப்படும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஹோலி விடுமுறைக்கு பிறகு ஹிஜாப் வழக்கு விசாரணை நடத்தப்படும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில பாஜக அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 13-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர‌சூட் தலைமையிலான‌ அமர்வு இவ்வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்க பரிசீலிப்பதாக தெரிவித்தது. அதற்கான அறிவிப்பு வெளியாகாததால் முஸ்லிம் மாணவிகள் தரப்பு வ‌ழக்கறிஞர் ஷதன் ஃபராஷ‌த், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர‌சூட் தலைமையிலான‌ அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் நினை வூட்டினார்.

அப்போது வழக்கறிஞர் ஷதன் ஃபராஷத், ‘‘ஹிஜாப் தடை தொடர்வதால் மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மாணவிகள் படிப்பை பாதியில் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்'' என்று கோரினார். அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் வழக்கு விசாரிக்கப்படாததால் மாணவிகள் தரப்பில் நேற்று மீண்டும் நினைவூட்டப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் மார்ச் 13-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறைக்கு பிறகு இவ்வழக்கை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும். அதன்பின் விரைந்து விசாரணை நடத்தப்படும்’’ என்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in