லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடு - விசாரணைக்கு ஆஜராகாத கேரள முதல்வரின் செயலர்

லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடு - விசாரணைக்கு ஆஜராகாத கேரள முதல்வரின் செயலர்
Updated on
1 min read

கொச்சி: கேரள மாநில அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே, ரவீந்திரன் அமலாக்கத் துறைக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘‘தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடருக்கான வேலைகளில் பரபரப்புடன் இயங்கி வருகிறேன். எனவே, தற்போது என்னால் ஆஜராக முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் நான் கண்டிப்பாக அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதல்வரின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

பின்னணி: 2 நாட்களுக்கு முன்பு, மலையாளத்தில் உள்ள பிரபல இணையதளம் ரவீந்திரனுக்கும், தங்க கடத்தல் மற்றும் லைஃப் மிஷன் வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலை வெளியிட்டது. இதில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in