Published : 27 Feb 2023 07:54 PM
Last Updated : 27 Feb 2023 07:54 PM

மேகாலயாவில் 76.66%, நாகாலாந்தில் 84% வாக்குகள் பதிவு

மேகாலயா முதல்வர் கே. சங்மா மற்றம் அவரது குடும்பத்தினர்

ஷில்லாங்/ கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மேகாலயாவில் 76.66 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 84 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மேகாலயா தேர்தல்: மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்துதொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57, திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டப்பேரவையின் முதல் பெண் எம்எல்ஏவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயாவில் 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 3,419 வாக்குப் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், மேகாலயாவில் 76.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாகாலாந்து தேர்தல்: நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இதுபோல காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளிலும், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. இங்கு 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மாநிலத்தில் 84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x