விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம்: ரூ.16,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம்: ரூ.16,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி
Updated on
1 min read

பெலகவி: விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக வழங்கும் விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் 11-வது தவணை கடந்த ஆண்டு மே மாதமும், 12-வது தவணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் விடுவிக்கப்பட்டது. 13-வது தவணை நிதி இன்று விடுவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெலகவியில் ரூ.190 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடியே விவசாயிகளுக்கான நிதியை விடுவித்தார்.

இதன்மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிதி சென்று சேர்ந்துள்ளது. இவர்களில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பெண் விவசாயிகள். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.2.25 லட்சம் கோடி நிதி சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதில், பெண் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.53,600 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in