

பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது.
பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலை யில் இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்ச நீதி மன்றம் இன்று வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.