Published : 14 Jul 2014 10:25 AM
Last Updated : 14 Jul 2014 10:25 AM
வேளச்சேரியில் பணத்துக்காக பெண்ணை கொலை செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சரஸ்வதி(27) என்பவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2-ம் தேதி வீட்டுக்குள் மயங்கி விழுந்துகிடந்த சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் பரிதாபமாக இறந்தார். பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் இறந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து வேளச்சேரி போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்தனர்.
வேளச்சேரி காவல் ஆய்வாளர் சேகர்பாபு நடத்திய விசாரணையில், சரஸ்வதியின் வீட்டுக்கு கடைசியாக ஓர் ஆணும் பெண்ணும் வந்து சென்றது தெரிந்தது. சரஸ்வதியின் செல்போனை ஆய்வு செய்ததில் ஒரு எண்ணில் பலமுறை பேசியது தெரிந்தது. அதை வைத்து நடத்தப் பட்ட விசாரணையில் சரஸ்வதியின் தோழி பூஜா பிடிபட்டார். இவர் பெரம்பூர் அருகே செம்பியம் பாக்ஸ்டன் தெருவில் கணவர் பினோஜ் உடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும்தான் சரஸ்வதி கொலை செய்யப்பட்ட அன்று அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரிந்தது. இருவரையும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையில், “சரஸ்வதியிடம் லட்சக் கணக்கில் பணம் இருப்பது தெரியும். அதை கொள்ளையடித்துவிட்டால் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தோம்.
இதனால் சம்பவத் தன்று பிற்பகல் சரஸ்வதியின் வீட்டுக்கு சென்றோம். நாங்கள் தயாராக கொண்டு சென்ற நைலான் கயிற்றினை எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் போட்டு இறுக்கினோம். அவர் மயங்கி விழுந்ததும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்து விட்டோம்” என்று இருவரும் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT